جزییات کتاب
இலக்கிய உலகில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த நாட்டுப்புறவியல் இன்று நவீன ஆலயங்களாகக் கருதப்படும் பல்கலைக் கழகங்களில் "பிரவேசம்' செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனினும் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இத்துறையில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளன. நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் போன்றவற்றின் தொகுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறினால்தான் இத்துறையில் மேலும் மேலும்ஆய்வுகள் செழிக்கமுடியும். புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்தபோது டாக்டர கி.வேங்கடசுப்பிரமணியம் புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைத்தொகுப்புத் திட்டத்திற்கு கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணனை இயக்குநராக அமரச் செய்தார். தமிழ்ப் படைப்புகளில் நாட்டுப்புற நறுமணம் கமழப் பெரிதும் காரணமாகவிருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத் தமிழியல் துறையினர் உதவியுடன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் புதுவை வட்டாரத்தில் வழங்கும் கதைகளைச் சிறப்புறத் தொகுத்து வகைப்படுத்தி தமக்கேயுரிய பாங்கில் எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளார்.153 கதைகளுடன் பதிப்பாசிரியரின் குறிப்புரையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் அமைந்த பதிப்புரையும் கொண்ட இந்நூல் பலவகையில் மற்ற தொகுப்புக்களிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதை ஆர்வலர்கள் எளிதில் கண்டுகொள்ள இயலும்.
------------
புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள் - கி. ராஜநாராயணன்